Saturday, October 22, 2016

உயிர்ப்புள்ள கதைகளைக் கேட்க மனிதர்கள் வருவார்கள்.

நேர்காணல்

பவாசெல்லதுரை
கேள்விகள் : இவள்பாரதி







எழுத்தாளர், பேச்சாளர், இப்போது கதை சொல்லியென, தன் பயணத்தில் புதிய புதிய பரிணாமங்களை நோக்கிப் பயணிக்கும் பவாசெல்லதுரை, திருவண்ணாமலையின் அடையாளம்.

ஒரு வருடத்திற்கும் மேல் சொந்த ஊரில் நடக்கும் பவாவின்கதை கேட்க வாங்கநிகழ்வைத் தொடர்ந்து இப்போது சென்னையிலும்பவாவின் கதை வெளிக்காக தன் கதைகளைச் சொல்லி முடித்த ஓர் இரவில் ஆடுகளத்திலேயே அப்படைப்பாளியைச் சந்தித்தோம்.

கேள்வி: எழுதுவதோடு எழுத்தாளனின் பணி நிறைவடைந்து விடுகிறது. அதைத் தாண்டி கதைகளை ஏன் சொல்ல வேண்டுமெனத் தோன்றியது உங்களுக்கு?

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு புழுக்கமான இரவில் என் நண்பன் ஜே.பி. என்னை அழைத்து நீ எங்களுக்குச் சொல்லும் கதைகளை ஏன் இன்னும் கொஞ்சம் விரிவாக்கி ஐம்பது நூறு பேருக்குச் சொல்லக்கூடாது எனக் கேட்ட நிமிடம் அது பிடித்துப் போனது.

அந்த வாரமே திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஆஸ்ரமத்திற்கு எதிரிலுள்ளகுவா வாடீஸ்பல்சமய உரையாடல் மையத்தில் அந்நிகழ்வை நடத்துவதென அவன் முடிவெடுத்து மரங்களும், செடிகளும், சிற்பங்களும், ஓவியமுமாய் நிறைந்திருக்கும் அவ்வளாகத்தில் நான் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரின் மூன்று கதைகளைச் சொன்னேன். அறுபது எழுபது பேர் பார்வையாளர்களாய் வந்திருந்தார்கள். அவர்களில் பலரும் என்னை இருபது வருடங்களுக்கும் மேல் பின்தொடர்பவர்கள் என்பதை அறிய சந்தோஷமாயிருந்தது.

அடுத்த பதினைந்தாவது நாள் அடுத்த கதை சொல்லல். இப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை நூற்றி ஐம்பதைத் தாண்டியிருந்தது. பயணம் சரியான பாதையில்தான் என்பது நிச்சயமானபோது உற்சாகம் எங்கள் இருவரையுமே தொற்றிக் கொண்டது. இப்போது 10 நிகழ்வுகளை முடித்து விட்டோம். அதிகபட்சமாக 300 பேர் வரை பங்கெடுக்கிறார்கள்.

கதைகளை வாசிப்பது என்பது ஒரு அனுபவம். கேட்பது அதற்கும் மேலே என நினைக்கிறேன். நாம் எல்லோருமே கதை கேட்டு வளர்ந்த மரபில் வந்தவர்கள். அது விடுபட்டுப் போன ஏக்கம் ஒவ்வொரு ஆழ்மனதிலும் இப்போதும் இருக்கிறது. நான் அதை கதைகள் சொல்லி நிரப்புகிறேன் எனத் தோன்றுகிறது.

அந்நிகழ்வின் காணொளிக் காட்சியை வம்சி உடனேயே youtube-ல் பதிவேற்றுகிறான். உலகின் பல நாடுகளில் இருந்தெல்லாம் அதற்குப் பாராட்டுகளும், தொலைபேசி அழைப்புகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. எனக்கான கைக்குலுக்கல்களும், பாராட்டுகளும் இந்த முப்பது வருடங்களில் இல்லாத அளவுக்குப் பெருகியிருக்கிறது.

கதைகளை மனிதர்கள் தொப்புள்கொடியறுத்த குழந்தைகளைத் தங்கள் கைகளில் ஏற்றுவதைப் போல ஏற்றிக் கொள்கிறார்கள்.

இதோ இப்போது என்னை இதுவரை நேரில் சந்தித்திராத, பத்து வருடங்களுக்கும் மேல் என் எழுத்தை மட்டுமே பின் தொடரும், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ரீகன், தன் நண்பர்களோடு சேர்ந்து சென்னையில்பவாவின் கதை வெளியென ஒரு நிகழ்வைத் துவங்கியிருக்கிறார்கள். இது மாதத்திற்கு ஒருமுறை நடக்கும். நீங்கள் பார்க்கிற இம்முதல் நிகழ்வில் அறுபது பேர் இருக்கிறார்கள். அடுத்த நிகழ்விலேயே இது முன்னூறைத் தாண்டும். சென்னையின் பரபரப்பும், சலிப்பும் நிறைந்த வாழ்வு உயிர்ப்புள்ள கதைகளைக் கேட்க, மனிதர்களை உந்தும். கேளிக்கைகளை உதறிவிட்டு வாழ்வின் உயிர்த் துடிப்புகளின் சப்தமெடுத்த குழந்தைகளோடு அப்பாக்களும், அம்மாக்களும் வருவார்கள்.

கேள்வி : நீங்கள் ஒருங்கிணைக்கும்நிலம்இலக்கிய நிகழ்வுகள் இப்போது பெரிதும் கவனப்படுத்தப்படுகின்றன. அதில் என்ன அத்தனை சிறப்பு?

சு.ரா. கம்யூனிஸ்டுகளை இலக்கியத்தில் கால் நனைப்பவர்கள் என்று சொல்வார். மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிப் போன ஒரு தேசத்தில் இங்கிருந்து அதை எழுதும் ஒரு எழுத்தாளன் அவர்களோடு இருந்து மட்டுமே இயங்கவும், எழுதவும் முடியும்.

என்ன காரணமென மையப்படுத்த முடியவில்லை, என் வாழ்வில் எல்லாத் தருணங்களும் இலக்கியம் மட்டுமே நிரம்பியிருக்கிறது. தொடர்ந்து கலை இரவுகள், முற்றம் என தமுஎசவில் இருந்தபோது முன்னெடுத்தவை இன்னும் தமிழ் கலை இலக்கிய உலகில் நினைவு கூறப்படுகிறது.

இப்போதுநிலம்செலவுகளைக் கருதிவம்சிபுக்ஸ்மாடியிலேயே அதை நடத்துவதென முடிவெடுத்தார்கள். ஆறு நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கின்றன.

ஆது ஒரு பெரும் அனுபவமாக மாறுகிறது. சூழலும், நாங்கள் பயன்படுத்தும் ஆரஞ்சுவண்ணக் குறைந்த ஒளியும், மலை மங்கலாகத் தெரியும் மொட்டை மாடியும், ஒரு படைப்பாளியின் ஆழத்திலிருந்து சொற்களைக் கோருகிறது.

கடந்த நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன் காப்ரியேல் கார்சியா மார்க்விஸ் - இன் படைப்புலகம் பற்றி இரண்டு மணிநேரம் பேசினார். ஒரு சிறு அசைவில்லை. மாடியைத் தாண்டி வராண்டாவிலும், தெருவிலும்வரை மனிதர்கள் நின்று கேட்டார்கள் ராமகிருஷ்ணன் சொன்னார், இருபது வருடங்களுக்கு முன் இங்குதான் போர்ஹேவைப் பற்றிப் பேசினேன். இப்போது மார்க்விஸ். சென்னை உட்பட தமிழ்நாட்டின் எந்நகரமும் என்னை இவர்களைப் பற்றி பேச அனுமதித்ததில்லை. அதனால்தான் இந்நகரைத் தமிழ்நாட்டின் டப்ளின் எனச் சொல்லுகிறேனென. முப்பது வருட உழைப்பு இருநூறு பேரை நுட்பமான பார்வையாளர்களாக மாற்றியிருக்கிறது.

கேள்வி : கதை சொல்லுதல், கூட்டம் நடத்துதல், தினம் தினம் உங்கள் வீட்டை நோக்கி வரும் இலக்கியவாதிகள், திரைப்பட ஆளுமைகள், வாசகர்கள் இவர்களை போஷித்தல் என்றிவை உங்கள் படைப்பின் கூர்மையை மழுங்கடிக்கவில்லையா?

மாறாகக் கூட்டுகிறது என நினைக்கிறேன். படைப்பே மனிதத் திரளும், அவர்களின் வாழ்வும்தானே. மனிதர்களற்ற, அவர்களின் முரணற்ற, ஈரமிக்க, வன்மம் நிறைந்த வாழ்வைத்தானே எத்தனை முக்கியமான எழுத்தாளனும் எழுத முடியும்?

இயல்பாகவே அது என் வாழ்வோடு இருக்கிறது. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். ஒவ்வொருவர் மீதிருந்து வரும் வாசனையும், வார்த்தைகளும், உடல்மொழியின் லாவகமுமே என் படைப்பின் நகர்வு.

பிரத்யேகமான என் நிலப்பரப்பையும், அதன் ஜீவனுள்ள மனிதர்களையும், மட்டுமே எழுதி முடித்தால் அது உலகின் எந்தப் பேரிலக்கியத்துடனும் வைத்துப் பார்க்கத் தகுந்த தகுதி பெறும்.

எங்கள் பஸ் ஸ்டேண்டில் இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை ஐந்து மணிவரை மனிதர்கள் பெட்டி, படுக்கையுடன் கூட்டம் கூட்டமாக ப்ளாட்பார தரையில் படுத்து கிடப்பதைப் பார்க்கலாம்.

அவர்கள் எல்லோரும் தங்கள் சொந்த கிராம மண்ணை, மனிதர்கள், பங்காளிகளை, ஆசையாய் வளர்த்த ஆடு, மாடுகளை தினம்தினம் ஒரு எட்டு போய் கால் நனைத்து வந்த பம்புசெட் வாய்க்கா தண்ணியையெல்லாம் நிராகரித்துவிட்டு ஏதாவதொரு கட்டணம் குறைந்த பேருந்தில் ஏறி பெங்களூருக்கோ, சீமோகாவுக்கோ கூலிகளாய்ப் போவதற்காகப் படுத்து கிடக்கிறார்கள்.

அங்கு அவர்களுக்குக் குளிக்க, வெளிக்குப் போக, படுக்க, உறவு கொள்ள, முத்தம் தர எதற்கும் இடமில்லை, ஆனாலும் இந்த சொந்தமண் நிராகரிப்பும், ரணத்தை நோக்கிய பயணமும் எதற்கு? வயிற்றுக்குத்தான். இதையெல்லாம் எழுத முடியாத கைகள் எதற்கு? இதையெல்லாம் எழுதாமல் நான் வேறெதை எழுதிவிடப் போகிறேன். என்ஏழுமலை ஜமாஇதன் ஒரு சிறு துளிதான்.

கேள்வி : விவசாய வாழ்வு உங்களுடையது. அரசுப் பணியிலும் இருக்கிறீர்கள், இதற்கெல்லாம் ஏது நேரம்?

என் அப்பா அம்மாவுடையதுதான் நிலம் சார்ந்த வாழ்க்கை. அப்பா ஆசிரியராக இருந்ததெல்லாம் பெயரளவுக்குத்தான். எப்போதும் நிலம், ஆயில் இன்ஞின், கமிட்டிக்கு மல்லாட்டை ஏற்றுவது என தினங்கள் அவரை குஷிப்படுத்தின நாட்களை அருகிலிருந்து உள்வாங்கியிருக்கிறேன்.

அவர் எங்களுக்குக் கொடுத்துப் போன நிலத்தில் ஒரு சென்ட்டையும் எத்தனை கஷ்டத்திலும் விற்கவில்லை. மேம்படுத்தியிருக்கிறோம்.

ஆறு மாதத்திற்கு முன் சென்னையிலிருந்து வந்த நண்பர் வி.பி.ராஜ் (பெசன்ட் நகரில்என்ற பெயரில் ஆர்கானிக் ரெஸ்ட்ராண்ட்) இந்த நிலத்திலிருந்து ஒரு பகுதியை எங்களிடம் கேட்டார். அவர் கடந்த பதினைந்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை, சூழல் என அதற்காகவே தன்னை ஒப்புக் கொடுத்த மனிதர். எதுவும் பேசாமல் நாங்கள் நிலம் தந்தோம்.

நிலத்தில் இயற்கை வேளாண்மைக்கென ஒரு பள்ளியைக் கட்டத் துவங்கியிருக்கிறார். எங்கள் கிராமங்களில் யாரையெல்லாம் படிப்பு வராதது என வெளியேற்றப் பட்டார்களோ, யாரையெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஒதுக்கினார்களோ அவர்களே இப்பள்ளியின் இயற்கை விவசாய மாணவர்கள். ஒரு பைசா கட்டணமின்றி இவர்கள் விவசாயத்தில் நாம் இழந்தவைகளை மீட்டெடுக்கப் போகிறார்கள். பாமயனில் ஆரம்பித்து நம்மாழ்வாரின் பல மாணவர்கள் இதில் ஆசிரியர்களாப் பங்காற்றுவார்கள்.

சிறிய துவக்கம்தான். ஆனால் பெரிதாய் வளர்வோம். அதனூடே ஒரு திரைப்படப் பயிற்சி கல்லூரிக்கும் (இதுவும் கட்டணமின்றிதான்) முயல்கிறோம். நண்பர்களின் வலு மிகுந்த கைகள் பலம் சேர்க்கின்றன.

காலை ஐந்து மணிக்கு எழுகிறேன். நடை பயிற்சியெல்லாம் இல்லை. நிலத்தில் வேலைகளினூடே நடத்துவிடுவேன். பத்து மணிவரை நிலத்திலிருப்பேன். அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும், செடியும், மாடும், கன்றும் கோழிகளும் வாத்துகளும் என் ஸ்பரிசம் பட்டே வளர்ந்தவை.

பத்து மணிக்கு அலுவலகம். அது எனக்குள் ஒட்டவேயில்லை. ஆனாலும் என் வேலைகளைப் பிசாசு மாதிரி செய்து முடிப்பேன்.

மாலையில் மீண்டும் நிலம், விவசாய வேலைகள் என்பது முற்று பெறாதது. தொடர்ச்சியாக அதில் நீங்கள் வேலை செய்து கொண்டேயிருந்தால் ஏதோ ஒருநாள் ஒரு அபூர்வ மலர் உங்களுக்காகப் பூக்கும். ஒரு கொய்யாப்பழம் மரத்தில் பழுத்து உங்கள் கைகளில் விழும். ஒரு மா மரத்தடி வேரில் எனக்கே எனக்கென ஒரு பழத்தை மறைத்து வைத்திருக்கும்.

இதையெல்லாம் சொல்ல சொற்கள் இல்லை. எத்தனை மல்லுக்கட்டினாலும் விவசாய வாழ்வு, எத்தனை இனிது என்பது வலிநிறைந்த விவசாய வாழ்விலிருந்தே உணரமுடியும்.

இரவு பன்னிரெண்டுவரை வாசிப்பும் எழுத்தும். அது அடுத்தடுத்த நாட்களை நனைத்துக்கொள்ள, மனிதர்கள் மீதான நேசத்தை இன்னும் அதிகமாக்கக் கற்றுத்தருகிறது.

இதற்கு நடுவில்தான் தேடிவரும் நண்பர்களை கவனித்துக் கொள்கிறோம். ஷைலஜாவும், வம்சியும், மானசியும் என் மனநிலையிலேயே இயங்குவதால் இதெல்லாம் சாத்தியமாகிறது. இதன் விரிவாக உத்ரா, கே.வி. ஜெயஸ்ரீ, சுகானா, அமரபாரதியென அவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.

எப்போதுமே நான் இலக்கியத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை இட்டு நிரப்புபவனல்ல. கோடுகள் இல்லாக் குடும்பமாகத்தான் இதை நாங்கள் வைத்திருக்கிறோம்.

கேள்வி : நவீன மலையாள இலக்கிய உலகத்தோடு உங்களுக்குள்ள தொடர்புகள் பற்றி

பால் சக்காரியாவின் யாருக்குத் தெரியும்? கதையைசதுரம்இதழில் படித்தவுடன் ஏற்பட்ட தொடர்பு அது. ஆனந்தின்நான்காவது ஆணி படித்து இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற வியப்பில் அவர்களைத் தேட ஆரம்பித்தோம்.

எம்.டி.விசக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, என்.எஸ். மாதவன், கே.ஆர்மீரா, சந்தோஷ் ஏச்சிக்கானம், மனோஜ் குரூர், .அய்யப்பன் என இருபதுக்கும் மேற்பட்ட நவீனப் படைப்பாளிகளின் படைப்புகளை என் மனைவி கே.வி. ஷைலஜாவும், அவள் சகோதரி கே.வி. ஜெயஸ்ரீயும் 20 புத்தகங்களாகத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது இன்னும் விரிவாகி ஜெயஸ்ரீயின் கணவர் உத்திரகுமாரனும், மகள் சுகானாவும் இப்போது இரு புத்தங்களையும் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்கள். சுகானா மொழிபெயர்ப்பில் வரப்போகும் அசோகன் சருவில் கதைகள் தமிழை நோக்கிப் புதிய அலைகளைக் கொண்டுவரும்.

மலையாள வாசகர்கள் நிறைய பேருக்கு இப்போது என்னைத் தெரியும். தேசாபிமானி, சந்திரிகா, போன்ற புகழ்பெற்ற இதழ்களில் வந்த என் பத்திகளும், கதைகளும், கட்டுரைகளும் அவர்களை என்னிடம் நெருக்கமாக்கியிருக்கிறது. தினமும் ஆறேழு மலையாளக் குரல்களையாவது என் தொலைபேசி வழியே தரிசிக்கிறேன். திருவண்ணாமலைக்கு அங்கிருந்து வரும் படைப்பாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுகிறது.

சமீபத்தில் மனோஜ் குரூர் சங்க இலக்கிய தமிழ்வாழ்வை முன்வைத்து எழுதியநிலம் பூத்து மலர்ந்த நாள்வெளியீட்டு விழாவிற்கு வந்த சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் கைகளை ஒரு அதிகாலையில் ஜெயஸ்ரீ வீட்டில் வைத்துப் பற்றினேன்.

நான் ஸ்பரிசிப்பது நின்றெரியும் ஒரு தீஜுவாலையை என்பதை உணர்ந்தேன். அன்றிரவு நடந்த அப்புத்தக வெளியீட்டில்,


‘‘இலக்கியம் படியாத உடல்கள் குருடர்களையும் ஆண்மையற்றவர்களையுமே பிரசவிக்கும்’’ என அவர் பேசியபோது ஏற்பட்ட அதிர்வு என்னிலிருந்து என்றும் அகலாது. அவருடையஒற்றைக் கதவுதமிழில் கே.வி.ஜெயஸ்ரீயால் மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது. அக்கதைகள் முழுக்க எரியும் மனதிலிருந்து எழுந்த தீதான். அன்று பின்னிரவுவரை எங்கள் வயல்வெளியில் மினுக்கிட்டாம் பூச்சிகள் தந்த வெளிச்சத்தினூடே அவருடன் நடந்து பேசித் தீர்த்த இலக்கியங்கள் வேறு யாராலும் அடையமுடியாத அனுபவங்கள்.

இருபது வருடங்களுக்குமுன் கேரளாவின் நெருப்பென பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டைச் சொல்வார்கள். இப்போது சந்தோஷ் ஏச்சிக்கானம். ஐம்பது படங்களுக்குக் கதைவசனம் எழுதியிருக்கிறார். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை பவாண்ணா, என் கதைகள் மட்டுமே எனக்கான தகுதி, அங்கீகாரம், பெருமிதம் எனச் சொல்லும் அவரின் மொத்தக் கதைகளையும் ஜெயஸ்ரீ மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கிறார். திருவண்ணாமலை தமிழ், மலையாள இலக்கியங்களை இணைக்கும் மனப்பாலமாக மாறியிருக்கிறது.

கேள்வி : உங்கள் குடும்பச் சூழல் எப்படி இவற்றை எதிர்கொள்கிறது?

என் குடும்பம் என்பது ஷைலஜாவும், வம்சி, மானசியும் மட்டுமல்ல. அதன் விஸ்தீரனம் இன்னும் விரிவானது. ஜெயஸ்ரீ, உத்ரா, சுகானா, அமரபாரதியில் ஆரம்பித்து, பீனிக்ஸ், மீனா, அபிதா, காயத்ரி, கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஷபி என நண்பர்களாலானது. குடும்பத்திற்கும் இலக்கியச் செயல்பாட்டிற்குமாக மெல்லிய கோடுகளற்ற வாழ்வுத்தான் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியின் மன அலைவுறுதலை எப்படி ஆராதிக்க வேண்டுமென அடிப்படையிலேயே கலை மனம் உள்ள ஷைலஜாவுக்குத் தெரியும்தானே! அதனால் எந்தப் பிரச்சனைகளுமின்றி இதையெல்லாம் ஒரு குடும்பமே மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடிகிறது.

நகை, பணம், வீடு, சொத்து எனச் சுருங்கிப் போன லௌகீகங்களின் மீதான நாட்டமுடைய ஒரு குடும்பச் சூழல், துரதிஷ்டவசமாக எனக்கு அமைந்திருந்தால் தற்கொலை செய்து செத்துப் போயிருப்பேன்.

கேள்வி : விவசாயி, அரசு அலுவலர், எழுத்தாளன், கதைசொல்லி, இலக்கியச் செயற்பாட்டாளன். இதில் யார்தான் நீங்கள்?

எல்லாமும்தான். நடுநிசிகளில் வாய்க்கால் நீர் காலில் நனைய அப்பாவோடு சேர்ந்து வயலுக்குத் தண்ணிகட்டிய அனுபவமேறிய பால்ய உடல் என்னுடையது. அது ஊறிப் போயிருக்கிறது. அதிலிருந்துதான் நான் உருவானேன். விவசாயத்தை மட்டமே பிரதானத் தொழிலாகக் கொண்டு இந்தியாவில் வாழமுடியாத துயர வாழ்வை என் அரசு வேலைதான் மாற்றியமைத்தது. அலுவலகத்தின் ஒரு துரும்புகூட என் மனதில் ஏறவில்லை. அது பிழைப்பதற்கான ஒரு நேர நிரப்புதல் அவ்வளவுதான்.

விவசாய வாழ்வும், அலுவலகச் சூழலும் எனக்குக் கதைகளைத் தருகிறது. நான் எழுதுவதற்கும், சொல்வதற்குமான ஜீவ ஊற்று இங்கிருந்துதான் நா நனைக்கிறது.

இதுவரை படித்து முடித்த ஆயிரக்கணக்கான கதைகள் மனதிலேயே தேங்கிக் கிடக்கிறது. அதன் மீறல் அவஸ்தையானது. அதன் வடிகால்தான் கதை சொல்லல். குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, டீக்கடைக்கு, தெருவுக்கு என தனித்தனியே சொன்ன கதைகள் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டு மைக் முன்னால் சொல்ல வைத்திருக்கிறது.

ஜீவனுள்ள கண்கள் என் கதைகளையும், சக படைப்பாளிகளின் கதைகளையும் தாகம் தீரக் குடிப்பதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்தான்.

கேள்வி : சூழலியலாளனாக, இயற்கை விவசாயியாக?

சூழலியலாளன் இயற்கை விவசாயி என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். 10 வருடங்களுக்கு முன் நம்மாழ்வரோடு போன ஒரு கார் பயணம்தான் என் நிலத்தை இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பியது. துணிந்து லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் ரசாயன உரத்தை, பூச்சி மருந்து தூக்கி எறிய வைத்தது.

சக விவசாயிகளின் கேலியாலும், கிண்டலாலும் எங்கள் செழிக்காத பயிர் தினம்தினம் வாடிப் போனது. பெரும் நம்பிக்கையோடு வரப்பில் நானும் ஷைலஜாவும் உட்கார்ந்திருப்போம்.

எங்கள் வயலில் இப்போது மண்புழுக்கள் நெளிகின்றன. தூண்டில்காரர்கள் அவற்றைத் தோண்டியெடுக்க, கொட்டாங்குச்சிகளோடு வருகிறார்கள்.

வம்சி எங்கள் வயல்வளையில் முழங்கைவரை விட்டு நண்டு பிடிக்கிறான். மழைநீரால் தலைப்பிரட்டை வரிசைகட்டி வருகிறது. போதும் இதுதான் என் கனவில் விரிந்த வயக்காடு.

பெரும் நஷ்டப்பட்டு இதை மீட்டிருக்கிறோம்.

ஆறு மாதங்களுக்கு முன் வி.பி.ராஜ் என என்னை தூரத்திலிருந்து அறிந்த ஒருவர் என்னைப் பார்க்க நிலத்திற்கு வந்தார். முதல் சந்திப்பே இடைவெளியற்றது. நிலத்தைச் சுற்றிப் பார்த்த ஏதோ ஒரு தருணத்தில் கவனித்தேன். எங்கள் இருவர் கைகளும் புதைந்திருந்தன.

சுற்றி இருக்கிற கிராமப்புற இளைஞர்கள், பயனடைய ஒரு இயற்கை வேளாண்மைப் பள்ளியை அவர் செயவில் எங்கள் நிலத்தில் கட்டியெழுப்பியுள்ளார். மேற்கூரை மட்டுந்தான் பணமின்றித் தாமதமாகிறது. நாங்களும் ராஜ் சாரும் இன்னும் கொஞ்சம் பயணித்தால் அது ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.

அதற்கருகிலேயே பட்டிக்காட்டுப் பையன்களுக்குப் பெரும் கனவாய் இன்னமும் தூரத்திலிருக்கிற சினிமா உருவாக்கத்தை அருகாக்கப் போகிறோம். ராஜ் அடிப்படையில் வைட்லைப் புகைப்படக்காரனாக ஆசைப்பட்டு மனித முகங்களைப் பதியும் Photographer ஆனவர். எடிட்டிங், Dubbing, sound என அனைத்தும் அவருக்கு அத்துபடி. அதற்கான Lab வைத்திருக்கிறார். சென்னை நெரிசலிலிருந்து நெற்பயிருக்கிடையே அவைகளைக் கொண்டுவரப் போகிறோம்.

எடிட்டர் பி. லெனின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், செழியன், வைட் ஆங்கிள் ரவிசங்கர், சாரங்கன், நாசர், மிஷ்கின், ராம், சீனுராமசாமி, ராஜூமுருகன், தாமிரா, மம்முட்டி எனப் பல நண்பர்களும் இங்கு வந்து எங்கள் கிராமத்துப் பையன்களுக்கு சினிமாவைச் சொல்லித்தரப் போகிறார்கள்.


கடந்துபோன இந்த இருபது வருடங்கள் எத்தனை மகத்தான கனவுகளை மெய்ப்பட வைத்திருக்கிறது. நான் பாக்யவான்.

No comments:

Post a Comment